Welcome banner

Greetings

Wednesday, 22 June 2011

விடுதலைப் புலிகள்

கொழும்பு, ஜூன். 22: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சுமார் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. பிரபாகரனின் மனைவி மதிவதனியும் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.
பிரபாகரன்-மதிவதனி தம்பதியருக்கு சார்லஸ், பாலசந்திரன் என்ற 2 மகன்களும், துவாரகா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் சார்லஸ், பாலசந்திரன் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.   என்றாலும் மதிவதனி, துவாரகா, பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக முன்பு பல தடவை கூறப்பட்டது.
இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த எம்.பி.யின் பெயர் ஏ.எச்.எம். அஸ்வர். இவர் இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆவார்.   அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு அஸ்கர் பதில் சொல்லவில்லை